Bonjour & Welcome

Powered by Blogger.

Translate

Facebook like box

Flickr Images

Home » » உடல் பொருள் ஆனந்தி

உடல் பொருள் ஆனந்தி

Written By Mahes on Wednesday, October 3, 2007 | 8:54 AM

திகில் தளத்தில் இந்திரா சௌந்தர்ராஜனுக்கெல்லாம் குருவான திரு. ஜாவர் சீதாராமன் 60களில் எழுதிய இந்த நாவல் இன்றைக்கும் விறுவிறுப்பு குறையாமல் Oven-ல் இருந்து எடுத்தது போல சூடாக, ஃப்ரஷ்ஷாக இருக்கிறது. நான் 'காற்று காற்று உயிர்' படித்த அனுபவத்தை எழுதியிருந்தேன். அதை பார்த்துவிட்டு எனது நண்பர் பிரபு இந்த நாவலை பற்றி சொன்னார். இந்த நாவலை பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தாலும், இந்த முறை அதை படித்துவிடவேண்டும் என்ற் தோன்றியது. அதிர்ஷ்டவசமாக நான் கோவையில் அள்ளிய புத்தகங்களில் இதுவும் இருந்தது. இது ஜாவர் சீதாராமன் 60களில் எழுதிய இந்த புத்தகம் ஒரு முறை டி.டி-1ல் தொடராக வந்திருந்தது தெரியும். ஆனால் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே பார்க்கும்படி நேர்ந்தது. அதை comedy போல எடுத்திருந்தார்கள். நடிகர் சத்தியராஜ் ஒரு பேட்டியில் தனது கனவு பாத்திரமாக இந்த நாவலில் வரும் திலீபனை கூறியிருந்தார். இதை முழுவதுமாக படித்து முடித்தபோது தான் அந்த பாத்திரம் நடிப்புக்கு எவ்வளவு scope உள்ளது என்று புரிந்தது. துரதிர்ஷ்டவசமாக இந்த நாவலை திரைப்படமாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எதுவும் நிறைவேறவில்லையாம்.


இந்த நாவல் நம் கற்பனை திரையில் உருவகப்படுத்திக்கொள்ளும் வகையில், திரைக்கதை பாணியில் அமைந்துள்ளது. நாவல் ஒரு மழைக்காலத்தில், ராமநாதனின் மனதில் ஏற்படும் மோதல்களை பிரதிபலிப்பது போல இடியும், மின்னலும், சூறாவளியும் நிறைந்த இரவில் தொடங்குகிறது. ராமநாதன் திலீபனை கொல்ல புறப்படுகின்றான். வழியில் அவன் தாயார் மீனாக்ஷி அம்மாளையும், காதலி சீதாவையும் பார்த்து குற்ற உணர்வில் புழுங்கியபடி காரியத்தில் இறங்குகின்றான். அதே நேரத்தில் ஆஸ்பித்திரியில் அடைக்கப்பட்டிருக்கும் திலீபன் டாக்டரை கெஞ்சி, கொஞ்சி, தப்பிக்க முயற்சிக்கிறான். ஜாவரின் இந்த பாணி நம்மில் 'சரியான நேரத்தில் ராமநாதன் போவானா? ராம்நாதன் ஏன் இப்படி செய்கிறான்? பிறகு என்ன நடக்கும்?' என்று பல கேள்விகள் எழுப்புகின்றன. அதை ஃப்ளாஷ் பேக் முறையில் விவரித்து, புயலுக்கு பின்பு அமைதிபோல, இயல்பான கதைக்குள் இழுத்துக்கொண்டு போகின்றார். மொத்தத்தில் திரைப்படத்தில் பெயர் போடும் முன்பாக ஒரு பரபரப்பான துவக்கம் போல அட்டகாசமாக ஆரம்பிக்கிறது கதை.

ஜாவர் சீதாராமன் 'லாஜிக்கே இல்லாமல் ஒரு மேஜிக்' கதையை சொல்லியிருக்கின்றார். அதை எண்டமூரியை போலவோ, இந்திராவை போலவோ எந்த இடத்திலும் அறிவார்த்தமாக விவரிக்க முயற்சிக்கவில்லை. அதே நேரம் 'இப்படியெல்லாம் நடக்குமா என்ன?' என்று நம்மை யோசிக்கவிடாமல், அடுத்து என்ன நடக்கும் என்றே கவனமாக இருக்கும்படி காட்சிகளை அமைத்து இருக்கிறார். ஒருவகையில் இந்த unapologetic approach தான் இந்த படைப்பை காலம் கடந்து நிற்க வைத்திருக்கிறதா? Hypnotism பற்றி பேசுகிறார் ஆனால் அதன் ஆழத்துக்கு போகவில்லை. Mind Frequency tuning, அலையும் ஆத்மாக்கள் என்று மேம்போக்காக கதைக்கு தேவையான அளவுக்கு மட்டுமே தொட்டுக்கொண்டு, விறுவிறுப்பு மட்டுமே எனது லட்சியம் என்று வீறுநடை போடுகிறார்.

இந்த நாவலின் பாராட்டும்படியான அம்சம் ஜாவர் சளைக்காமல் போட்டுக்கொண்டே இருக்கும் மர்ம முடிச்சுக்கள். திலீபனின் கதாபாத்திரம் மிருகத்தன்மைக்கும், மென்மைக்கும் இடையே ஊசலாடும் காட்சிகள் பின்பு ஆராயப்படும்போது நமக்கு 'அட! இது நமக்கு தோனாம போச்சே?' என்று ஆச்சரியத்தையும், 'ஓ! அதனால் தானா இப்படி நடந்தது' என்ற வியப்பையும் எற்படுத்த தவறவில்லை. குறிப்பாக அந்த உச்சக்கட்டம் படு வேகம். சிறிது கவனம் தவறினாலும் அந்த கடைசி 15 பக்கத்தை மீண்டும் படித்தால் தான் என்ன நடந்திருக்கிறது என்று புரியும். இந்த நாவல் திரை இயக்குனர்களை வசீகரித்ததில் வியப்பேதும் இல்லை. ஆனால் இத்தனை complex-ஆன கதையை, சாமானியரும் புரிந்துகொள்ளும் வகையில் தெளிவாக முழுவதுமாக கொணரமுடியுமா? அந்த வேகத்தை திரைக்கு transfer செய்யமுடியுமா என்பதில் அவர்களுக்கு ஏற்பட்ட பயம் நியாயமானதே.

கதையை ராமநாதனின் பார்வை மூலம் நகர்த்திக்கொண்டு போயிருப்பது நல்ல யுக்தி. ராமநாதனின் கவலைகள், குழப்பங்கள் என்று நமது மனநிலை ஒரு curiousity-யில் குடிகொள்கிறது. இந்த மனநிலையே நம்மை அடுத்து என்ன நடக்குமோ என்று எதிர்பார்க்க வைக்கிறது. மேலும் இந்த perspective-ல் திலீபனும், ஆனந்தியும், ஒரு புதிராகவே இருக்கிறார்கள். அதுபோல கதையோட்டத்தில் எப்போதோ வந்துபோன பெயர்கள் எல்லாம் முடிவில் முக்கியமான கதாபாத்திரங்களாக மாறுவதில் ஜாவரின் யுக்தி நம்மை சபாஷ் போட வைக்கிறது.

நான் ஆரம்பத்தில் ஒரு 60-70 பக்கங்கள் படித்திருந்த நிலையில் வைத்தியிடம் சொன்னேன் - 'It is not as eerie as it was made out'. ஆனால் கதையின் வேகம் அதற்கு பிறகு தான் சூடு பிடிக்கிறது. திலீபன் அந்த வீட்டில் நுழைவது, அதன் பின்னணி எல்லாம் நம்மை மெதுவாக கதைக்கு தயார் செய்கிறது. கதையின் நாயகன் ராமநாதனோ என்று நினைக்கவைத்து, மெல்ல மெல்ல திலீபனின் பாத்திரத்தை develop செய்து, முடிவில் அவனையே நினைவில் நிற்கும் கதாபாத்திரமாக மாற்றியிருக்கிறார் ஜாவர் சீதாராமன். Now I take my statement back partially. கதை பயமூட்டுவதை விட பரபரப்பூட்டுவதே நிறைய. முன்பே சொன்னது போல முடிச்சுகள் அவிழ்வதும், ஆரம்பமும் படு வேகம்.

அதேபோல ஆனந்தி தாமதமாகத்தான் கதைக்குள் நுழைகிறாள். முடிவில் நம் பரிதாபத்தையும் சம்பாதித்துகொள்கிறாள். நாயகியான சீதாவை முழுவதுமாக overshadow செய்து, கதையின் சுவாசமாக தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறாள் ஆனந்தி. உடல் பொருள் ஆவி என்ற சொற்றொடரில் 'உடல் பொருள் ஆனந்தி'யாக ஏன் வந்தாள் என்பது சற்று மூலையை கசக்கினாலும் யூகிக்க முடிந்ததே என்றபோதிலும், நம்மை யூகிக்காமல் கதையில் கவனம் செலுத்த வைத்திருப்பதே ஜாவரின் சாமர்த்தியம்.

ஆயிரம் தான் தகவல் தொழில்நுட்பங்கள் வந்தாலும், புத்தகத்தில் படிப்பதற்கு ஈடு இணையில்லை என்ற என் நம்பிக்கையை மீண்டும் நிரூபிக்க வந்துள்ளது இந்த 'உடல் பொருள் ஆனந்தி'. மேலும் 'காற்று.. காற்று.. உயிர்'க்கு ஏதோ வகையில் 'inspiration'-ஆக இருந்திருப்பது இந்த 'உடல் பொருள் ஆனந்தி' என்பதை இந்திரா சௌந்தர்ராஜனும் கூட ஒத்துக்கொள்வார் என்று நினைக்கிறேன்.

எனது உருவகத்தில்:-
திலீபன்: 'மொழி' பிருத்விராஜ் (அந்த vulnerability, மற்றும் திமிரின் perfect combination)
ராமநாதன்: இளம் வயது சரத்குமார்
ஆனந்தி: டி.வி (விபச்சார கேஸ் புகழ்) புவனேஸ்வரி (அந்த கண்கள் மற்றும் vamp image காரணமாக). இப்போது யோசிக்கையில் வித்யா பாலனின் கண்களும், சிரிப்புக்கும் அந்த menacing quality உள்ளது என்பது எனது அபிப்பிராயம்.
சீதா: 'புள்ளகுட்டிகாரன்' சங்கீதா.
மேஜர் மாயனாதன்: மேஜர் சுந்தர்ராஜன் (அந்த enigma-வுக்காக)
மாமா சம்பந்தம்: 'பழைய நடிகர்' பகவதி.
ராமநாதன் வீடு: வாசன் ஹவுஸ் (அதாங்க! கன்னத்தில் முத்தமிட்டால், பிரண்ட்ஸ், சந்திரமுகியிலே எல்லாம் வருமே), சென்னை 60களில் இருந்ததுபோல ஜன சந்தடியின்றி
ஊட்டி லொகேஷன்: 7மைல்ஸ் சவுக்குதோப்பு, அரசாங்க விடுதி (மல்லிகையம்மா வீடு)


பதிப்பாளர்: அல்லையன்ஸ் பதிப்பக்கம், மயிலாப்பூர், சென்னை. போன்: 91-44-24941314
பக்கம்: 380
விலை ரூ. 85/-

பின் குறிப்பு: சினிமா, புத்தகம், சொந்த அனுபவங்கள் குறித்த மற்றும் மொபைல் வீடியோக்கள் அடங்கிய எனது மற்ற பதிவுகளை www.maheshwaran.com என்ற இணையதளத்தில் படிக்கலாம்.


SHARE

About Mahes

1 comments :

  1. ஆஹா, இன்றைக்குதான் உங்க பிளாக் பார்க்கிறேன். உடல் பொருள் ஆனந்தி குமுத பைண்டிங் எங்க வீட்டில் ரொம்ப நாள் இருந்தது. சுட்டுக் கொண்டு போனது யார் என்று தான் தெரியவில்லை :-(
    மாயாமாளவகெளளை- ஸ்பெல்லிங் சரியா, எனக்கு தெரிந்த ராகத்தின் பெயர் இது ஒன்றுதான் :-)

    ReplyDelete